விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !
&
அம்மா கட்டிலில் நாட்பட்ட நோயாளியாக
தொண்ணூறைத் தொட்டுவிட்ட நிலையில் -
எதிரில் மௌனப் பிரதிமையாய் நான்-
என்னுள் பாசப் பிரவாகங்கள் எழுந்து
உதட்டுக் கதவங்களில் மோதி உடைகின்றன-
தாயின் விழி அலைகளைச் சந்திக்கும் திராணி அற்றவனாய் -
எண்ணிலா ஆர்வக் கேள்விகள் கொக்கிகளாய்க் கண்களில் -
பல்லாயிரம் பாச வினவுதல்கள் வரிசையிட்டு விழிகளில் -
தாயால் கேட்கவோ என்னால் விடையிடவோ முடியாத தவிப்புகள் -
எதற்குப் பின் நீ வந்தனை தாயின் முன் தூரங்கள் கரைத்து ?
தாயே ! எதற்கும் என்னிடம் சரியான விடையில்லையே என் செய்வேன் ?
உன் மௌனம் முகிழ்க்கின்ற வினாக்கள் அனைத்தும்
என் நலமே சார்ந்தவை என்று அறியாதவனா நான் ?
மகனின் தயக்கங்கள் அறியாத தாயும் அல்லவே நீயும் !
உன் முன் பொய் சொல்லத் திராணியில்லை என்பதால் மௌனம் காக்கிறேன் -
அம்மா ,இம் மௌனக் கரைதலில் கண்களின் கசிவில்
எத்தனையோ சேதிப் பரிமாற்றங்கள் ! பாத வீழ்தல்கள்-
ஆசி இறக்கங்கள் ! அன்புத் தழுவல்கள் !மன்னிப்பு மகிமைகள் !
எந்தத் தகுதியில் நான் உன்னுள் ஜனித்தேன் ?
விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !
------சந்திர கலாதர்
No comments:
Post a Comment