Thursday, November 3, 2011

I WITHER KNOWING NOT THE ANSWER, MOM !

விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !

&

அம்மா கட்டிலில் நாட்பட்ட நோயாளியாக

தொண்ணூறைத் தொட்டுவிட்ட நிலையில் -

எதிரில் மௌனப் பிரதிமையாய் நான்-

என்னுள் பாசப் பிரவாகங்கள் எழுந்து

உதட்டுக் கதவங்களில் மோதி உடைகின்றன-

தாயின் விழி அலைகளைச் சந்திக்கும் திராணி அற்றவனாய் -

எண்ணிலா ஆர்வக் கேள்விகள் கொக்கிகளாய்க் கண்களில் -

பல்லாயிரம் பாச வினவுதல்கள் வரிசையிட்டு விழிகளில் -

தாயால் கேட்கவோ என்னால் விடையிடவோ முடியாத தவிப்புகள் -

எதற்குப் பின் நீ வந்தனை தாயின் முன் தூரங்கள் கரைத்து ?

தாயே ! எதற்கும் என்னிடம் சரியான விடையில்லையே என் செய்வேன் ?

உன் மௌனம் முகிழ்க்கின்ற வினாக்கள் அனைத்தும்

என் நலமே சார்ந்தவை என்று அறியாதவனா நான் ?

மகனின் தயக்கங்கள் அறியாத தாயும் அல்லவே நீயும் !

உன் முன் பொய் சொல்லத் திராணியில்லை என்பதால் மௌனம் காக்கிறேன் -

அம்மா ,இம் மௌனக் கரைதலில் கண்களின் கசிவில்

எத்தனையோ சேதிப் பரிமாற்றங்கள் ! பாத வீழ்தல்கள்-

ஆசி இறக்கங்கள் ! அன்புத் தழுவல்கள் !மன்னிப்பு மகிமைகள் !

எந்தத் தகுதியில் நான் உன்னுள் ஜனித்தேன் ?

விடை தெரியாது வதங்குகிறேன் தாயே !



------சந்திர கலாதர்

No comments:

Post a Comment