நம்பிக்கைகளில் நனைந்து கிடப்பதால்
புனிதமாய்ப் புரண்டோடி வந்த கங்கையே
உன்னை அறியாமைக் கழிவுகளால்
புண்ணாக்கிப் புழுவாக்கி நாறடித்தோம்--
ஒளியாகி ஓங்கார ஒலியாகி இசையாகி
பசுமை விரிக்கப் பரந்த உன்னை
நோய் நிழலாக்கி ஊன் சாம்பலாக்கி
வழியெல்லாம் ஊனமாக்கி உனையே வணிகமாக்கி
சாதித்துவிட்டதாய் பெருமை பூத்தோம் -
பாவங்கள்கூட மட மானுடர்க்குச் சுமக்கலாம்
அழுகிய சடலங்களை உன் பொன்மேனியினில்
அனுமதிப்பது எப்படித் தகும் சொல்வாய் ?
பொங்கிக் கரை மீறிக் கடவுளுக்கே அடுக்காத
பொய்மைப் போக்குகளை விழுங்கிவிடு -
மறுபடி தலை எடுக்காதபடி அழித்துவிடு .
------சந்திர கலாதர்
No comments:
Post a Comment