வயதாகிப்போனால்
&
வயதாகிப் போச்சு
இதயம் திறக்கத் தயக்கமாகிறது -
ரத்த பந்தங்கள் உராய்வு கொள்ளுமோ ?
என் எழுத்துக்கள் பாராட்டுப் பெறுகின்றன -
ஆனால் பந்தங்கள் மனதில் அவையே
எப்படித் தீப்பந்தங்களாக வீழ்கின்றன ?
எழுத்துக்கள் ஒருவேளை
அவர் விழி நுழைகையில் இடம் மாறி அமர்ந்து
எதிரான அர்த்தங்கள் எழுப்புகின்றனவோ?
ஸ்படிகமான என் மொழிகளில்
பின் எப்படிக் களங்கம் கரைந்து கொள்கிறது ?
கட்டுப்பாடுகளில் இறுகிப்போன எனக்கு
இவர்கள் நடத்தைகள் அனைத்துமே
தறிகெட்டுத் திரிவதாய்
வெறி கொண்டு அலைவதாய்
எங்கோ மோதிச் சிதறப் போவதாய்--
பதட்டமாய் மனம் பின் தொடர்கிறேன்
ஆனால் வாய் மூடி மௌனியாய் !
ஆம் ,வயோதிகம் வேறென்ன செய்யக்கூடும் ?
-------சந்திர கலாதர்
No comments:
Post a Comment