Saturday, December 10, 2011

ஏன் இந்தப் பொய் ?
 
&
 
"எப்போதும் ஒன் நினைவுதாம்மா !"--
 
ஏன் இந்தப் பொய்?
 
அதுவும் இந்த நகர நகரா வாழ்வில் ?
 
காக்கா கரையும் முன்பே
 
காது புண்ணாகும் சாலைக் கரைச்சல்கள் -
 
உருப்படாத வேலைக்கெல்லாம்
 
ஊர் முழுக்க அலைச்சல்கள் -
 
புழுதியில் தலை சிலுப்பி
 
பள்ளத்துள் புரண்டு பொடிந்து
 
சப்தத்துள் நொந்து செத்து
 
சாபங்கள் எரிந்து கொட்டி
 
நாட்களை வீணுக்குள் வீழ்த்திவிட்டு
 
இரவினைக் கவலை கடித்துத் குதறும்
 
இந்த அன்றாட வாழ்க்கையிலே
 
நம் பெயரும் நமக்கே மறக்கும் அவலத்தில்
 
"எப்போதும் உன் நினைவுதாம்மா !"--
 
ஏன் இந்தப் பொய்க் கூற்று, ஓ மானுடா ?
 
 
------சந்திர கலாதர்

No comments:

Post a Comment