Saturday, December 8, 2012

அவளை உனக்கு மிக நன்றாகவே தெரியும்
அவள் உன்னைப் பார்த்துத்தான் புன்னகைக்கிறாள்
நீயோ சுற்றும் முற்றும் பார்க்கிறாய்
நாலுபேர் பார்ப்பதுபோல் தோன்றுகிறது
அவள் புன்னகையை மிதித்துச் செல்கிறாய்
இதுதானே அவளது உலகம் --
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
அவள் மீது தான் எத்தனை போர்வைகள் ?
இளக்காரம் ,அருவருப்பு ,அலட்சியம் ,
மதிப்புத் தாழல் ,கண்ணியக் குறைவு
இன்னும் எத்தனை எத்தனையோ போர்த்திவிட்டு
அவளை மூச்சடைக்க மூடி விட்டோமே !
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
தனக்குள் தான் புதைந்து கிடக்கிறாள்
தன் தனி உலகில் முகமின்றி வாடுகிறாள்-
என்ன பேசினாலும் அவளுக்கு எல்லாம்
அவளே கேள்வி அவளே பதில் !
ஆண்டாண்டாய் அவள் சிந்திக்கின்றாள்
தன்னோடு கூட மற்றெவரும் புரியவில்லை -
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
பாச பந்தங்கள் இராப்பகலாய்த் தேடுகிறாள்
கொச்சை மொழிகளே குறைவின்றிப் பெறுகிறாள்
கண்களில் சலிப்பு விழிகளில் நெருப்பு
எற்றுவது போன்று பார்வையின் உதைப்புகள்
கொஞ்சும் மொழி ஒன்றுக்காய் குப்பை கிளறுகிறாள்
தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறாள்
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
விரக்திக் கடலுள் வீழ்ந்து விட்டாள்
கடல் பார்த்து கரை சேர்த்தால் உண்டு
படைத்தோனும் கண் இறக்க மறந்து விட்டான்
பெற்றவையும் கற்றுவிட்ட பாவத்தால்
காத தூரம் காணாது ஒதுங்கியே போயின--
இதுவும் கூட அவள் சிரிப்பில் அடக்கம்
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
புறத்தில் அமைதிப் பசிபிக் மாக்கடலாய்
அகத்தில் அட்லாண்டிக் சுழல் கொந்தளிப்பாய் -
அவள் மௌன முக முகட்டில்
சூழ்ந்திருக்கும் பொதி மேகங்கள் கீழ்
கொதித்திருக்கும் செந்தீக் குழம்புகள்
என்று பீறிடும் யார்தான் அறிவார் ?
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
கருணை எங்கே கனிவாய் கனிகிறது ?
சொற்கள் எங்கே அமுதாய் நனைக்கிறது ?
செவிகள் எங்கே விண்ணாய் விரிகிறது ?
தொடுகை எங்கே இதமாய் அணைக்கிறது ?
வாழ்க்கை முழுதும் தேடுதற்கன்றோ
இருந்தும் இல்லாத உறவுகள் கொடுத்தான் ?
இதுதானே அவளது உலகம்
இது ஒட்டிக் கொள்ளும் நோயா என்ன ?
 
அவள் வாழ்ந்து கெட்டது போதும் போதும்
இறைவா அவளை அழைத்துக் கொண்டுவிடு
சுகம் எனும் கீற்றைக் காணாத ஜீவன்
மனத்தில் மிதிகளே நிறைத்திருக்கும் ஆன்மா
இன்னுமும் உடல் வலிகள் வேண்டவே வேண்டா
உயிரின் சித்திரவதை போதும் போதும்
அமைதியில் அவள் உயிர் அடங்கிப் போகட்டும்
தென்றலின் இழையாய்க் கலந்து செல்லட்டும் !
 
----சந்திர கலாதர்
08.12.2012 / சனி / கார்த்திகை 23
மாலை மணி 6
S.CHANDRA KALAADHAR

No comments:

Post a Comment